சென்னை: நடிகர் கமல் வீட்டில் தனிமைப்படுத்துதல் பிரசுரம் ஒட்டிய விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 4 வாரத்தில் சென்னை மாநகராட்சி விளக்கம் தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் வெளிநாடு சென்று வந்ததாக கூறி மாநகராட்சி அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வினோத்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உயர் அதிகாரிகள் கூறியதால் தான் நோட்டீஸ் ஒட்டியதாக வினோத்குமார் புகார் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. யாரெல்லாம் வெளிநாட்டில் இருந்து மீண்டும் சென்னைக்கு வந்தார்களோ அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி இருந்தனர். இது மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பிறகு விசாரணை நடத்திய பிறகு தான் நடிகை கவுதமி வெளிநாடு சென்று வந்ததாகவும், அவரது பாஸ்போர்ட்டில் உள்ள முகவரி என்பது நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை முகவரியாக இருந்த காரணத்தினால் அதற்காக நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.