×

கண்மாயில் கழிவுநீர் சேருவதால் சம்பை ஊற்று பாதிக்கப்படும் அபாயம்

காரைக்குடி: காரைக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடிநீர் ஆதாரமாக உள்ள சம்பை ஊற்றின் அருகே சங்கமமாகி வருவதால் குடிநீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காரைக்குடி சிறப்பு நிலை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 13.75 சதுர கி.மீ பரப்பளவு உள்ள இப்பகுதியில் 153.013 கி.மீக்கு மேல் சாலைகளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 6 ஆயிரத்து 793 க்கு மேல் மக்கள் உள்ளனர். நிலத்தடிநீரை சேமிக்க 36 வார்டுகளிலும் 15க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

மழைநீர் குளங்களில் நிறைந்து நகரை சுற்றி உள்ள காரைக்குடி கண்மாய், அதலைக் கண்மாய், நாட்டார் கண்மாய், செஞ்சைக்கும், தெற்கு தெருக்கும் இடையே உள்ள கண்மாய் மற்றும் நெட்னி கண்மாய் ஆகியவற்றுக்கு சென்று நிறையும். இந்த தண்ணீர் கண்மாய் பாசனத்தை நம்பி உள்ள 1000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. நகரின் வளர்ச்சியால் மழைநீர் வரும் வரத்து கால்வாய்களும், நீர் வெளியேறும் கால்வாய்களும் காணாமல் போய் விட்டது. தவிர நகரின் பிரதான பிரச்னையாக கழிவுநீர் வெளியேற்றம் மாறி வருகிறது. வீடுகளில் இருந்து தினமும் 20 லட்சம் லிட்டருக்கு மேல் கழிவுநீர் வெளியேறி வருகிறது. அதலைக் கண்மாய் வாறுகால் வழியாக மழைநீர் காரைக்குடி கண்மாய்க்கு செல்லும்.

தற்போது இந்த வாறுகால் வழியாக கழிவுநீர் செல்கிறது. இது காரைக்குடி கண்மாயில் சங்கமமாகி வரும் நிலையில், அருகே உள்ள காரைக்குடி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமான சம்பை ஊற்றில் கழிவுநீர் கலப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. கழிவுநீர் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடியில் இறங்கி குடிநீரோடு கலப்பதால் அதில் உள்ள கடின தன்மை காரணமாக குடிநீரின் சுவையும் மாறி வரும் நிலை உருவாகி உள்ளது.
தற்போது அதலைக் கண்மாய் வாரிக் கால்வாய் தூர்வாரப்பட்டு வரும் நிலையில் அதில் கழிவுநீர் செல்வதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் கூறுகையில், நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாயில் சென்று சேருகிறது. இது சம்பை ஊற்று குடிநீரில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வுகாண பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

Tags : flooding , Dank tarn, sewerage, mains labors
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!