பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவில் கொரோனா நோயாளி உயிரிழந்ததை அடுத்து மருத்துவமனையை தாக்கியத்துடன், ஆம்புலன்ஸை தீ வைத்து கொளுத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 55 வயதான நபர் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சில மருத்துவமனையின் மீது கல்வீச்சிலும் ஈடுபட்டனர். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையும் தாக்கினர். இந்த சம்பவத்தில் 5 மருத்துவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் ஆத்திரம் அடங்காமல் சாலைக்கு வந்தவர்கள், கொரோனா நோயாளியுடன் மருத்துவமனைக்கு வந்த அவசர ஊர்தியை தடுத்து நிறுத்தி தீவைத்தனர். தீயணைப்புத்துறை வாகனம் வருவதற்குள் ஆம்புலன்ஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
தொடர்ந்து, தகவல் அறிந்து வந்து பெலகாவி போலீசார் வன்முறை கூட்டத்தை களைத்தனர். மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.