புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில அரசு பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியராக சுமார் 1300 பேர், கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை தினகூலி ஊழியராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில ஊழியர்கள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தற்கொலைக்கு முயன்ற ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, தொடர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அரை மணி நேரம் கழித்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கைது செய்தனர். இந்த நிலையில்தான், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 ஊழியர்கள் மீது 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, அரசு உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், தொற்று நோயை ஏற்படுத்துதல், கூட்டங்களை அதிகளவு சேர்த்தல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே வவுச்சர் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது தற்போது உள்ள சூழலில் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும் விதத்தில்தான் உள்ளது. எனவே காவல் துறையினருக்கு அரசு கைது செய்ய உத்தரவளித்ததன் அடிப்படையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.