திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேனீர் கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணப்பாறை அடுத்த ஊத்துகுடியில் பூட்டிவிட்டு சென்ற தேனீர் கடையில் நள்ளிரவு திடீரென புகை வந்துள்ளது. இதையடுத்து கடையின் உரிமையாளர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், தீயை அணைக்க பொதுமக்கள் முற்பட்ட நிலையில், கடையில் இருந்த ஏரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் சுப்பிரமணியன், நாகராஜன் மற்றும் பூவாகி உள்ளிட்ட 5 பேர், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தேனீர் கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பற்றிய தீ அடுத்தடுத்த மூன்று கடைகளுக்கு மளமளவென பரவியது. இந்த விபத்தில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அந்த கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துவிட்டன. தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து மணப்பாறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.