×

மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் விவகாரம் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு, கடந்த  பிப்ரவரி மாதம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மீதான புகார் குறித்து ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கான எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.  இதற்கு கண்டனம் தெரிவித்த  நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அமைச்சர் மீதான வழக்கை கைவிட தமிழக அரசு எப்படி முடிவு எடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், அமைச்சர் மீதான தங்களுடைய புகார்கள் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வக்கீல், வழக்கு நிலுவையில் உள்ள வரை அமைச்சர் குறித்து  பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Tags : Velumani ,hearing ,Court , Corporation, Tender malpractice, Complaints, Minister Velumani, Case, Court hearing, Adjournment
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...