திருமலை: ஆந்திரா, கிழக்கு கோதாவரி மாவட்டம், சீதா நகரம் மண்டலம், வேதுல்லப்பல்லியை சேர்ந்தவர் வரபிரசாத் (26). இப்பகுதியில் கடந்த 19ம் தேதி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் லாரியில் மணல் கடத்திச் செல்வதை பார்த்த வரபிரசாத், அவர்களை தடுத்து நிறுத்தினார். அப்போது, அங்கு காரில் வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, வரபிரசாத்தை தாக்கிவிட்டு அங்கிருந்து லாரியை எடுத்து சென்றுவிட்டார். பின்னர் கிருஷ்ண மூர்த்தி, சீதாநகரம் காவல் நிலைய போலீசாரிடம் தனக்குள்ள அதிகார பலத்தை வைத்து வரபிரசாத் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.
அதன்படி, சீதா நகரம் காவல் நிலைய எஸ்ஐ ஷேக் பெரோஸ்ஷா கடந்த 20ம் தேதி வரபிரசாத்தின் வீட்டிற்கு சென்று விசாரணைக்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர், காவல் நிலையத்தில் வரபிரசாத்தை தாக்கி அவரது மீசை, தலைமுடியை கத்திரியால் வெட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதையறிந்த தாழ்த்தப்பட்டோர் நல சங்கத்தினர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, எஸ்ஐ பெரோஸ்ஷா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.