×

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறை அனுபவிக்கும் 7 பேர் விடுதலை, பேரறிவாளன் பரோல் குறித்து பதில்தர வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்தும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்தும் ஒரு வாரத்திற்குள் பதில் தருமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.  இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே,  அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கடந்த 2019 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் பரோல் வழங்க முடியும் என்று தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை என்று ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது என்றார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 29ம் தேதி தள்ளிவைத்தனர்.

Tags : convicts ,Rajiv ,government ,High Court ,Tamil Nadu ,Perarivalan , Rajiv murder, case, life imprisonment, 7 released, Perarivalan parole, reply, Government of Tamil Nadu, High Court
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...