×

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும்  தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, வெளிநாடு களில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘வெளிநாட்டில் உள்ள தமிழர்களை மீட்டு வர ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை  58 விமானங்கள்  இயக்கப்பட உள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு 41 விமானங்களும், திருச்சிக்கு 11 விமானங்களும், கோயம்புத்தூருக்கு 4 விமானங்களும், மதுரைக்கு 2 விமானங்களும் இயக்கப்படும்’ என்று தெரிவித்தார். இதுதொடர்பான விவரங்களை வரும் 30ம் தேதி தாக்கல் செய்யுமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : High Court ,Tamils , Abroad, Tamil, bring, 58 planes, movement, High Court, Central Government information
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...