×

மனைவி கண்முன் பயங்கரம் நில புரோக்கர் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை: ஆட்டோ கும்பலுக்கு வலை

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வீரமணி (46). நில புரோக்கர். இவரது மனைவி மகாலட்சுமி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வீரமணி வீட்டில் இருந்து வெளியே உள்ள கழிவறைக்கு வந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் 3 பேர் வந்து வீரமணியிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றி அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்து வீரமணியை சரமாரியாக வெட்டினர். அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி மகாலெட்சுமி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். பின்னர், வீரமணி அக்கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். அக்கும்பல் அவரை விடாமல் துரத்தி ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

இதில், படுகாயம் அடைந்த வீரமணி தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த மர்ம கும்பல், அங்கிருந்து ஆட்டோவில் தப்பி தலைமறைவாகினர். தனது கண் முன்னே, கணவனை கொலை செய்த சம்பவத்தை பார்த்து மகாலெட்சுமி கதறி அழுதார். பின்னர், அங்கு அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரப்பரப்பும் ஏற்பட்டது.  இதுகுறித்து தகவலறிந்த, அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன், அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் பரணிகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, போலீசாரிடம் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கொலையாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தினர். இதன் பிறகு, போலீசார் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புகாரின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், நில புரோக்கர் வீரமணிக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே நில பிரச்னை இருந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை செல்போனில் ஒருவர் மிரட்டினார். இதுகுறித்து, அவர் தனது மனைவி மகாலட்சுமியிடம் கூறினார். இதற்கிடையில், இப்பிரச்னை காரணமாக வீரமணியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து கொலையாளிகளை 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.  பட்டப்பகலில் மனைவி கண் முன் நில புரோக்கரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : auto gang ,death , In front of wife, land broker, hacking murder, auto gang, web
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...