ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம்-தொளவேடு பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்புகள் உடைந்து, காணப்படுகிறது. பால தடுப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் ஏனம்பாக்கம் கிராமம் உள்ளது. இதை சுற்றி கல்பட்டு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், விவசாய பொருட்கள் வாங்குவதற்கும், வேலைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு இக்கிராமத்தையொட்டி உள்ள ஏனம்பாக்கம் ஆரணியாற்றில் இறங்கி தண்டலம் செல்லவேண்டும்.
பின்னர், அங்கிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவார்கள். மழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வந்தால் இந்த 20 கிராம மக்கள் செங்காத்தாகுளம் மற்றும் வெங்கல், சீத்தஞ்சேரி கிராமங்களின் வழியாகவும் 10 முதல் 20 கி.மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்லவேண்டும். இதனால், ஏனம்பாக்கம்-தொளவேடு ஆரணியாற்றின் இடையே கடந்த 2011-2012ம் ஆண்டு ₹ 6 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால், 20 கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர் திடீரென கடந்த சில மாதங்களுகு முன்பு உடைந்து விட்டது. தற்போது மழைக்காலம் என்பதால் உடனே இதை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.