திருவனந்தபுரம்: கேரளாவில் நுழைவு தேர்வு எழுதிய 7 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், திருவனந்தபுரத்தில் கட்டுப்பாடுகளை மீறி திரண்ட 600 மாணவர்கள், பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 16ம் தேதி பொறியியல், மருந்தாளுனர் நுழைவு தேர்வு நடந்தது. சுமார் 90 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினர். பல மையங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நூற்றுக்கணக்கானோர் திரண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் தேர்வு எழுதிய 5 மாணவர்களுக்கும், ஒரு மாணவனின் தந்தைக்கும், கொல்லம் மற்றும் கோழிக்கோட்டில் தேர்வு எழுதிய தலா ஒரு மாணவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் 2 மையங்களில் திரண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.