நோபல் பரிசு வென்றவர்களுக்கு ஆண்டுதோறும் பாரம்பரியமாக வழங்கப்படும் ஆடம்பர விருந்து, நடப்பாண்டு கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளின் கீழ், அரும்பெரும் பணிகளை ஆற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறும்.
ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர், ஓஸ்லோ நகரில் அமைதிக்கான பரிசும், ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில், மற்ற ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அவ்வாறு நோபல் பரிசு பெறுவோருக்கு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலுள்ள சிட்டி ஹாலில் அரச குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஆடம்பர விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த விருந்தில், சுவீடன் நாட்டு அரச குடும்பத்தினர் உள்பட உலகம் முழுவதும் 1,300 வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்வர்.
தற்போது கொரோனா அச்சத்தால் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக நடப்பாண்டு, பாரம்பரிய விருந்து ரத்து செய்யப்படுவதாக, நோபல் அறக்கட்டளை இயக்குநர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் அறிவித்துள்ளார். வழக்கமாக நடைபெறும் இந்தாண்டு நோபல் விருந்து கொரோனா தொற்று காரணமாக தற்போதைய சூழ்நிலையில் நடத்த முடியாத நிலையில் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். கடந்த 1956-ம் ஆண்டு 2-ம் உலகப் போரின் போது ரத்து செய்யப்பட்ட பாரம்பரிய விருந்து, அதன்பின்னர் தற்போது கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.