வாஷிங்டன் : அமெரிக்கா அலாஸ்காவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகணத்தின் சிக்னிக்கில் இருந்து தெற்கே 75 மைல் தூரத்தில் இன்று காலை 11.42 மணிக்கு மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 16-ம் தேதி முதல் தொடர்ந்து சிறிய அளவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அந்த நிலநடுக்கங்கள் ரிக்டரில் 3 என்கிற அளவிலேயே பதிவாகி உள்ளது.
தற்போது முதல் முறையாக ஒரே நாளில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இரண்டாவது முறையாக அலாஸ்காவின் சேண்ட் பாய்ண்ட் நகரின் கடற்கரை பகுதியில் இருந்து 103 கிலோமீட்டர் தூரத்தில், 17.7 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்த இரு நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சில இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சேதம் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.