×

சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சென்னையில் 4, 5 நாட்களுக்கு முன்னரே 5 லட்சம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். கடந்த மாதம் பரிசோதனைகளை அதிகரிக்க முதலமைச்சர் ஆணையிட்டதை தொடர்ந்து,  இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரையில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜூன் 19-ம் தேதி நாள் ஒன்றுக்கு 4,500 பரிசோதனைகள் வரை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட 14,000 பரிசோதனைகள்  மேற்கொள்ளப்படுகிறது.

முதல் 1,00,000 பரிசோதனைகள் 2 மாத காலத்திலும், இரண்டாவது 1,00,000 பரிசோதனைகள்  25 நாட்கள் காலத்திலும், மூன்றாவது 1,00,000 பரிசோதனைகள் 16 நாட்களிலும், நான்காவது 1,00,000 பரிசோதனைகள் 10 நாட்களிலும், ஐந்தாவது 1,00,000 பரிசோதனைகள்  9 நாட்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு விரைவில் சோதனை நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மக்கள் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஒருமுறை வெளியே சென்றால் 10 நாளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார். பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர 4,92,149 பேர் இ-பாஸ் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல் முதியோர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இன்னும் 3 மாதங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மொத்த பாதிப்பு 88,377ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,952 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 1,475 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.



Tags : Individuals ,Chennai ,Prakash ,Corona , Chennai, Corona
× RELATED ஜி.வி.பிரகாஷ் இவானா நடித்த கள்வன்: ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது