வேலூர்: ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நளினி, தற்கொலைக்கு முயன்றதை தொடர்ந்து தற்போது அவர் நலமாக உள்ளதாக சிறை மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேலூர் சிறையில் நளினிக்கும் அவரது அறைக்கு அருகில் உள்ள மற்றொரு பெண் கைதிக்கும் கடந்த 3 நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சிறையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மீண்டும் நளினிக்கும், அந்த கைதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறை பாதுகாப்பு போலீசார் அவர்களை விலக்கி விட்டனர். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிய நளினி, அறையில் இருந்த துணியை எடுத்து தனது கழுத்தில் 2 சுற்றுகள் சுற்றி இறுக்கிக் கொண்டாராம்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த சிறை போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து சிறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், நளினியை காப்பாற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது சிகிச்சை பெற்று வந்த நளினி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதாவது அவரது கழுத்து பகுதியில் காயம் ஏதும் இல்லை என்றும் நளினியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் சிறைக்காவலர்கள் சான்றளித்துள்ளனர்.