சென்னை: சமீபத்தில்,கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் முருகப் பெருமானை போற்றி பாடப்படும், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான விமர்சனம் எழுந்தது. மேலும் கேவலமாக சித்தரித்தும், வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சர்ச்சை குறித்து முக்கிய தலைவர்கள் பலர் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து அந்த யூடியூப் சேனல் நிர்வாகிகளான சுரேந்தர் நடராஜன் உட்பட நான்கு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அந்த சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் நடிகர் ரஜினி இதுவரை இந்த சர்ச்சை குறித்து எந்தவித கருத்தும் கூறாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கந்தசஷ்டி கவசம் சர்ச்சையில் துரிதமான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் என்று நடிகர் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புன்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும் , கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!! என குறிபிட்டுள்ளார்.