சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மழை ஆரம்பித்து விட்டது. புயல் சின்னங்கள் நிலை கொள்ளும். மீண்டும் முன்பே நாம் எதிர் கொண்ட பிரச்னைகள் செய்திகளாகும். சுனாமி, பெருமழை, பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் சமுதாயத்தில் முதலில் பாதிக்கப்படுவது மீனவச்சமுதாயமே. ஒவ்வொரு பேரிடரின் போதும் படகுகள் காணாமல் போவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் முடியாத் தொடர்கதையாகவே உள்ளது.
தற்போது பருவ மழை துவங்கியுள்ள சூழலில் மீண்டும் ஒரு புயலுக்கான சூழல் உருவாகலாம். எனவே அரசு கடந்த காலங்களில் செய்த அலட்சிய போக்கை கைவிட்டுவிட்டு, ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பழவேற்காடு முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் கடல்நீர் உள்புகுவதை தடுப்பதற்கு பாறைக்கற்களுக்கு பதிலாக, ஆறு மூலை கான்கிரீட் போடவேண்டும். மீனவர்கள் இறந்த பிறகு பல லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்குவதை விட, அவர்களது உயிரை காப்பாற்றும் அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு கருவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.