×

புதுக்கோட்டை அருகே பயங்கரம் இரு தரப்பினர் மோதல்: போலீஸ் துப்பாக்கி சூடு: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள போசம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் பரமசிவம்(50), உடையப்பன்(55). உறவினர்களான இவர்கள், கிராமத்தில் இரு தரப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் உடையப்பன் தரப்பில் போட்டியிட்ட வேட்பாளரை தோற்கடிக்க பரமசிவம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் உடையப்பன் தரப்பை சேர்ந்தவர்கள் குறித்து தவறாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதில் ஆத்திரமடைந்த உடையப்பன் தரப்பினர் நேற்று முன்தினம், பரமசிவம் மற்றும் அவரது மகனை தாக்கினர். இதில், பரமசிவத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  

இதனிடையே, நேற்று காலை பரமசிவத்தின் ஆட்கள் 50 பேர், உடையப்பன்  தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கிக்கொண்டனர். தகவலின்பேரில், போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த இடமே போர்க்களம் போல் காணப்பட்டது. பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, எஸ்ஐ சரவணன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் இரு தரப்பினரும் தலை தெறிக்க ஓடினர். எனினும், மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 15பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Pudukkottai ,hospital ,Police shooting , Pudukkottai, terror, clashes between two sides, police firing, 10 people hospitalized
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...