மும்பை: கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல் தெரிவித்துள்ளார். போட்டி அட்டவணை குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் எதிரொலியாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சொந்த மண்ணில் நடத்தும் ஆசை ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தொற்று இந்தியாவில் 10 லட்சத்தை தாண்டி விட்டதுடன், இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஐ.பி.எல். போட்டியை நமது நாட்டில் நடத்தும் முடிவை கைவிட்டு வெளிநாட்டில் நடத்துவது தான் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடத்திய அனுபவம் இருப்பதால் அந்த நாட்டிலேயே இந்த ஆண்டுக்கான போட்டியையும் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். அத்துடன் ஐக்கிய அரபு அமீரத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதுடன், மைதானம், தங்குமிடம், விமான பயணத்துக்கான வசதி உள்ளிட்ட வாய்ப்புகள் நன்றாக இருப்பதால் அங்கு நடத்தலாம் என்று யோசனை தெரிவித்து வந்தனர்.
இதனால் செப்டம்பர் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார். வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர், கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.