கோவில்பட்டி : எந்த மதத்தினை, யாரை புண்படுத்தினாலும் அரசு வேடிக்கை பார்க்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.பின்னர், காமநாயக்கன்பட்டியில் ரூ.17.65 லட்சத்தில் கட்டப்பட்ட ஊரர்டசி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் ரூ.10 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,இந்தியா மதசார்ப்பற்ற நாடு. இறையாண்மையைப் போற்றுகிற நாடு. யார் எந்த மதத்தை புண்படுத்தினாலும், இதனை ஒரு மக்கள் இயக்கமாக சேர்ந்து எதிர்க்க வேண்டும். கறுப்பர்கூட்டம் போன்ற விஷமிகள் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயலை செய்கின்றனர். இது போன்றவைகளை பார்க்கவோ, அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வதையோ தவிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இயக்கமாக மாறினால் இது முற்றிலும் ஒழிக்கப்படும். தமிழக அரசு கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்துக்கு சீல் வைத்து, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது. எந்த மதத்தினை, யாரை புண்படுத்தினாலும் அரசு வேடிக்கை பார்க்காது. மதத்தை புண்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் , என்றார்.