×

தங்கையை திருமணம் செய்து தரும்படி மிரட்டல் தலையில் அம்மிக்கல்லை போட்டு ரவுடி கொலை: அண்ணன் கைது

ஆலந்தூர்: தங்கையை திருமணம் செய்து தரும்படி கேட்டதால், தலையில் அம்மிக்கல்லை போட்டு ரவுடி படுகொலை செய்யப்பட்டார். ஆதம்பாக்கம், ஆபீசர்ஸ் காலனி, 5வது தெருவை சேர்ந்தவர் அப்பு (எ) மணிகண்டன் (34). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிரபல பெண் தாதா பவுலினா என்பவரின் மகன். மணிகண்டனுக்கும், அவரது தாய்மாமன் மகன் கார்க் (எ) எட்வின் (25) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு  மணிகண்டன் ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோயில் தெருவில் உள்ள எட்வின் வீட்டிற்கு  சென்றுள்ளார். அங்கு, இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறியதும் மணிகண்டன், ‘மாமன் முறையான எனக்கு உன் தங்கையை திருமணம் செய்து கொடு’ என்று கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எட்வின், ‘ரவுடியான உனக்கு என் தங்கையை திருமணம் செய்து கொடுத்தால் அவள் வாழ்க்கை பாழாகிவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

அப்போது மணிகண்டன், ‘யார் எதிர்த்தாலும், நான் உன் தங்கையை திருமணம் செய்தே தீருவேன்’ என கூறிவிட்டு, போதை மயக்கத்தில் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த எட்வின், இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்துள்ளார். மேலும், தனது தங்கையை திருமணம் செய்து தரவில்லை என்றால், மணிகண்டன் தன்னை கொன்று விடுவானோ என அச்சமடைந்த எட்வின், நேற்று அதிகாலை வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த மணிகண்டன் தலையில் போட்டுள்ளார். இதில், மண்டை உடைந்து மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் எட்வின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மணிகண்டன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் பதுங்கி இருந்த எட்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : brother ,Rowdy ,sister , Marrying younger sister, giving, threatening, beheading, Rowdy murder, brother arrested
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...