தாம்பரம்: ‘அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று தமிழ் தென்றல் திரு.வி.கவால் புகழப்பட்ட மறைமலையடிகள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் அமைத்து தமிழமையும், சைவத்தையும் இரு கண்களாக கொண்டவர். 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பல ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய பின்பு பல்லாவரத்தில் ராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கி, பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனை ‘பொதுநிலை கழகம்’ என பெயர் மாற்றி அதன் மூலமாக பல நூல்களை வெளியிட்டவர்.
மணிமொழி நூல் நிலையத்தை உருவாக்கியவர். இவர், ‘பல்லாவரம் முனிவர்’ என்றும் அப்போது குறிப்பிட்டார். பல்லாவரம் சாவடி தெருவில் அவர் வாழ்ந்த இல்லம் நூற்றாண்டை கடந்து இன்று வரை உள்ளது. எனவே, அவர் வாழ்ந்த சாவடி தெருவின் பெயரை மறைமலையடிகளார் தெரு என்றும், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு மறைமலையடிகளார் பாலம் என்று பெயர்சூட்ட வேண்டும் என திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.