சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் 3வது மாடியில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் (24). இவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் முழுவதும் இரவு நேரங்களில் அதிகமாக பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தங்கும் விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் கண்ணனின் உடலை கைப்பற்றிய போலீசார், பணி சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது ஏதேனும் குடும்ப பிரச்னை காரணமாக இத்தகைய முடிவுக்கு வந்தாரா என்று விசாரிக்கின்றனர். பெற்றோர் தற்போது கண்ணனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் விவகாரமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதன் காரணமாக ஏராளமானோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்திருப்பது மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.