சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை விதிகளுக்கு உட்பட்டு மத உணர்வு பாதிக்காமல் அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத உணர்வு பாதிக்காமல் உடல் அடக்கம் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச்சடங்கின் போது மனிதநேயமற்று கையாண்டு வீசி எறிதல், நோயாளிகளை மரியாதைக்குறைவாக நடத்துதல் தொடர்பான செய்திகள் பரவிய வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை விதிகளுக்கு உட்பட்டு மத உணர்வு பாதிக்காமல் அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.