பாட்னா: பீகாரில் மின்னல் தாக்கியதில் மேலும் 10 பேர் பரிதாப உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், அசாம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இந்நிலையில் பீகாரில் மின்னல் தாக்கியதில்மேலும் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். பல இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். நதிகளின் நீர்மட்டம் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பூர்ணியா, வெகுசோராய், சாம்பராம், மதேபூரா உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதில் பீகாரில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகாரில் கடந்த 3 வாரங்களில் மின்னல் தாக்கியதில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்தின் இறுதியில் 21 மாவட்டங்களில் ஒரேநாளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நித்திஷ்குமார் தெரிவித்துள்ளார்.