×

வரலாற்றில் முதன்முறையாக புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரை நிறுத்தி வைப்பு : ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரையை நிறுத்தி வைத்து வரலாற்றில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டம் ஓவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்குவது வழக்கம். அதன்படி, 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட வரையறை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் மத்திய உள்துறை ஒப்புதல் அளித்தது. அதன்படி, இன்று சட்டசபை பட்ஜெட் கூட்டம் கூடுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். காலை 9.30 மணிக்கு பட்ஜெட் கூட்டம் கவர்னர் உரையுடன் துவங்குவதாகவும் மதியம் 12.05 மணிக்கு நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்றிரவு கவர்னர் கிரண்பேடி முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், துறை வாரியான நிதி ஒதுக்கீடு, நிதிநிலை அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே, பட்ஜெட் தேதியை வேறு ஒரு நாளைக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.இதையடுத்து நேற்றிரவே, முதல்வர் நாராயணசாமி இதற்கு விளக்கம் அளித்து, கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். அதில், புதுச்சேரி அரசின் பட்ஜெட் திட்ட வரையறை தங்களின் ஒப்புதல் பெற்ற பிறகு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

எனவே, மீண்டும் தனியாக தங்களிடம் ஒப்புதல் பெற தேவையில்லை. மேலும், நீங்கள் அனுப்பிய கடிதத்தை நான் வாங்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு குறித்த மானிய கோரிக்கைகளை முன்கூட்டியே முடிவு செய்வது வழக்கம் இல்லை. அதற்கான அலுவல் குழு கூடி முடிவு செய்யப்பட்டு, தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இது கடந்த 4 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. எனவே, துணை நிலை ஆளுநர் மரபுபடி வந்து உரையாற்ற வேண்டும் என ெதரிவித்திருந்தார்.

இதனால் துணை நிலை ஆளுநர் சட்டசபைக்கு வந்து உரையாற்றுவாரா? என்ற கேள்வி எழுந்தது. காலை 9.30 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம் 9.35 வரை கூடவில்லை. பின்னர் 9.45 மணிக்கு சட்டசபை கூடியதும் சபாநாயகர் திருக்குறள் வாசித்து சபையை துவக்கி வைத்து, ஆளும் கட்சி எம்எல்ஏ லட்சுமிநாராயணனை பேச அழைத்தார்.அப்போது, குறுக்கிட்ட அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் நான் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொடுத்திருக்கிறேன். அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். துணை நிலை ஆளுநர் உரை இடம்பெறுமா? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்துகொண்டு அதிமுக எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரிமண்டன், அசானாவும் வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதியும் துணை நிலை ஆளுநர் உரை இடம்பெறாதது சட்டவிரோதம், இதற்கு அதிகாரம் கிடையாது என அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து லட்சுமி நாராயணன் எம்எல்ஏ புதுச்சேரி சட்டமன்ற நடத்தை விதிகள் 1961ன் கீழ் 21ன் படி குறிப்பு ஒன்றை வாசித்தார். அதில், துணை நிலை ஆளுநர் பட்ஜெட் திட்ட வரையறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவிட்டது. துணை நிலை ஆளுநர் வருகை தாராத காரணத்தினால், விதி எண் 309ன் கீழ் துணை நிலை ஆளுநர் உரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேலும், சட்டப்பூர்வமாக பட்ஜெட் கூடியிருக்கிறது. துணை நிலை ஆளுநர் அவகாசம் கேட்பதால், நிதி நிலை தாமதமாகி மக்களை பாதிக்கும், என்றார்.

இதனை சபாநாயகர் சிவக்கொழுந்து குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, துணை நிலை ஆளுநர் உரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும். மதியம் 12.05 மணிக்கு நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் கூறி சட்டசபையை ஒத்தி வைத்தார்.வரலாற்றில் முதன் முறையாக கவர்னர் உரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் யூனியன் பிரதேச நிர்வாகியான ஆளுநர் உரையை நிறுத்தி வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். இருப்பினும் புதுச்சேரி சட்டசபையில் இன்று ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

Tags : Governor ,speech ,Pondicherry Assembly ,time , Historic, Pondicherry, Assembly, Governor
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...