பழநி: பழநி மலைக்கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில், மீறி செல்போன் கொண்டு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை, அரியவகை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மூலவருக்கு தினசரி 6 கால பூஜைகள் நடக்கின்றன.
தற்போது பழநி மலைக்கோயிலில் செல்போன் மற்றும் கேமிராக்கள் மூலம் படம்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆர்வமிகுதியால் பக்தர்கள் சிலர் மூலவரை செல்போன் மூலம் படம் பிடித்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இது ஆகம விதிகளுக்கு முரணாகவும், பாதுகாப்பு காரணங்களை மீறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலுக்கு செல்போன் கொண்டு வருவதை தடுக்க, அதற்கு கட்டணம் விதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதன்படி அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் கட்டண அடிப்படையில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்கள் வாங்கிக்கொண்டு டோக்கன் வழங்கும் முறையை, நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கீழே ஒரு கட்டணமும், மலை மீது 3 மடங்கு கட்டணமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் நாளடைவில் கோயிலுக்கு பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதை தவிர்ப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் கொரோனா ஊரடங்கு முடிந்த பின், நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.