சென்னை: கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஊராட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள், நாணயம், மணிகள், எலும்புக்கூடுகள், செங்கல் சுவர் மாதிரியானவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழாய்வுகளின் மூலம் கண்டெடுக்கபட்ட தொல் பொருட்களை வருங்கால சந்ததியினர்கள், மாணவ, மாணவியர்கள், அறிஞர்கள் தொல்லியல் வல்லுனர்கள் மற்றும் அயல் நாட்டு அறிஞர்கள் அறியும் வகையில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ஒரு அகழ்வைப்பகம் அமைப்பது இன்றையமையாகிறது. பழந்தமிழரின் புகழை உலகறிய செய்ய அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த சூழலில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில், தொல்லியல் ஆய்வுவாயிலாக, தமிழர் பெருமையினை பறைசாற்றிட, சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.12.25 கோடியில் உருவாகும் உலகத்தரம் மிக்க அகழ்வைப்பகத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முதன்மை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அருங்காட்சியம்: