சென்னை: தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 83 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 8 மாதத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து காவல் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் போலீசாரை பணியிட மாற்றம் செய்யும் பணி தற்போது தொடங்கி உள்ளது. அதன்படி தமிழகம் பல்வேறு காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் பெண் தலைமை காவலர் உட்பட 83 பேரை மாநிலம் முழுவதும் டிஜிபி திரிபாதி பணியிடமாற்றம் செய்துள்ளார். குறிப்பாக மாநகர காவல் துறையில் இருந்த 33 பேரும் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 பேர் சென்னை மாநகர காவல் துறைக்கு வந்துள்ளனர்.