×

பொன்னேரி கிளை சிறையிலிருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்: 8 மணி நேரத்தில் பிடிபட்டான்

பொன்னேரி: பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி 8 மணி நேரத்தில் பிடிபட்டான். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் கிளைச்சிறை உள்ளது. இதில் 30 விசாரணை கைதிகள் மற்றும் கொலை குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று எஸ்.ஐ ஒளிமுத்து பணியில் இருந்தார், அப்போது அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த விசாரணை கைதி டில்லிபாபு (25) என்பவர் கடந்த 7ம் தேதி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை 7:30 மணிக்கு கிளைச்சிறை கைதிகள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, டில்லிபாபு, கேட் மீது ஏறி நைசாக தப்பிச் சென்றார். தூய்மை பணி முடிந்து கைதிகளை போலீசார் சரிபார்த்தபோது டில்லி பாபு தப்பியது தெரியவந்தது.

உடனே கிளைச் சிறை கண்காணிப்பாளர் சுயம்புலிங்கம், பொன்னேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு  செய்து தப்பியோடிய விசாரணை கைதியை தேடினர். மேலும், போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் செல்போன் மூலம் டில்லிபாபுவின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், தச்சூர் கூட்டுச் சாலையில் கிருஷ்ணாபுரத்தில் ஆந்திரா நோக்கி டெல்லிபாபு நேற்று மதியம் 3:30 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

நேற்று முழு ஊரடங்கு என்பதால் டெல்லிபாபு அங்கிருந்து உடனடியாக தப்பிக்க வாகனம் கிடைக்கவில்லை. மேலும், ஊரடங்கால் சாலையில் போக்குவரத்து இல்லாத காரணத்தால் யாரிடமும் உதவியும் கேட்க முடியாமல் சாலையில் தவித்தார். அப்போது, அந்த பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த போலீசார் டெல்லிபாபுவை கண்டனர். போலீசாரை கண்டு அவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணைக் கைதி தப்பிய 8 மணி நேரத்தில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Inmate ,branch jail ,Ponneri , Ponneri Branch Jail, trial prisoner, escaped, 8 p.m., caught
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்