×

தமிழகத்தில் 12,000 கோயில்களுக்கு பூஜை செய்ய வருமானம் இல்லை: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்!

சென்னை: தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் கோவில்கள் பூஜை நடத்துவதற்கு வருமானம் இல்லாமல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியோடு மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த கோயில்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அதனை சார்ந்து தொழில் செய்து வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கோவில்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உதவித்தொகை வழங்கக்கோரி தினமலர் நாளேட்டின் வெளியீட்டாளர் ஆராத் கோபால்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அறநிலையத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 37 ஆயிரம் கோயில்களுக்கு ஒருவரை மட்டுமே பணியமர்த்தும் அளவுக்கு வருமானம் வருகிறது. எனவே 12 ஆயிரம் கோயில்களுக்கு பூஜை செய்ய வருமானம் இல்லை என குறிப்பிட்டார்.

மேலும் சிறப்பு நிதியில் இருந்து சுமார் 46 ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் 7 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை கோருவது ஏற்புடையது அல்ல என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மற்றும் திறக்கப்படாத கோவில்களின் பட்டியல் அவற்றில் பணியில் உள்ளவர்களது பட்டியல் ஆகியவற்றை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Tags : temples ,Tamil Nadu ,Hindu Charities Department ,pooja , Temple, Pooja, Income, Icord, Department of Hindu Religious Affairs
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு