திருப்பதி: திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில், முன்னோட்டமாக இயக்கப்பட்ட தீயணைப்பு வாகனம் ஓடுபாதையில் கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி ரேணுகுண்டா விமான நிலையத்தில், பெங்களூரிலிருந்து வந்த விமானம் தரையிறங்க இருந்தது. இதற்கு முன்னோட்டமாக ஓடுபாதையில் இயக்கப்பட்ட தீயணைப்பு வாகனம் திடீரென எதிர்பாராமல் கவிழ்ந்ததால், மிகுந்த சேதமடைந்துள்ளது.
இந்த தகவலை உடனடியாக விமான பைலட்டுகளுக்கு, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தரையிறங்க வேண்டிய விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால், விமானத்தில் பயணித்த 60 பயணிகள் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மற்றும் பைலட்டுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கவிழ்ந்து கிடந்த தீயணைப்பு வாகனத்தை அங்கிருந்து அகற்றியதோடு, அதிகாரிகள் ஓடுபாதையை சரி செய்தன.
இந்நிலையில், 4 மணி நேரத்திற்கு பிறகு வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும், விமான ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் கவிழ்ந்ததால், ஏற்பட்ட சேதம் முற்றிலும் சரிசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.