×

திருப்பூரில் முழு ஊரடங்கிலும் மதுபானம் விற்பனை அமோகம்: மதுபானம் விற்கும் வீடியோ வெளியானதால் கடைக்கு சீல்!!!

திருப்பூர்: முழு ஊரடங்கு நேரத்திலும் திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் மதுபான விற்பனை நடைபெற்று வருவது பெரும் சர்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மாநகரில் இயங்கும் பார்களில் வைத்தும், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் மது விற்பனை நடைபெற்றது. கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட மதுபான வகைகளை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர். தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும் கட்டுப்பாட்டுடன் இன்று முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. முழு ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன. இந்நிலையில் திருப்பூரில் முழு ஊரடங்கு நேரத்தில் பல இடங்களில் கள்ளத்தனமான மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. சிறுபுலவப்பட்டி அருகே உள்ள மதுபான கூடத்தில் இன்று அதிகாலை முதல் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

வேலப்பாளையம் காவல் நிலையம் எதிரே இருக்கும் இந்த மதுபான கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை தெரிவித்தும் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கள்ளத்தனமாக மதுபானம் விற்கப்படும் வீடியோ வெளியானதை தொடர்ந்து மதுபான கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளரவில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திருப்பூரில் பல இடங்களில் மதுபானம் விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tirupur ,release ,shop , Tirupur, full curfew, liquor, seal
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி