குஜிலியம்பாறை: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவரை 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரிக்காலி ஊராட்சி பணியாளர்களுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா சோதனைக்காக ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவு 12ம் தேதி தெரியவந்தது. இதில் துப்புரவு பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அன்றைய தினமே மூவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 12ம் தேதி முதல் மூவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 40 வயது துப்புரவு பணியாளர் 15ம் தேதி திடீரென மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதேபோல் மற்ற 2 பணியாளர்களும் 16ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘கொரோனா பாதித்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் கொரோனா சிகிச்சைக்கு சென்றவர்களை 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்தது எப்படி? 3 நாளில் கொரோனா குணமாகிவிடுமா? இவரது குடும்ப உறுப்பினர்களின் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்னரே, இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம்தான் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றனர்.