×

பணி செய்யவிடாமல் அதிமுகவினர் இடையூறு; தற்கொலை செய்யப்போவதாக பெண் ஊராட்சி தலைவர் கதறல்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்

நெய்வேலி: தனது பணிகளில் அதிமுகவினர் இடையூறு செய்வதாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் வெளியிட்டுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த பெரிய காப்பான்குளம் ஊராட்சியில் சின்னகாப்பான் குளம், வீரட்டிக்குப்பம், ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி தலைவர் தேர்தலில் தமிழ்ச்செல்வி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் அரங்கநாதன். இவர் பெரிய காப்பான்குளம் ஊராட்சி திமுக செயலாளராக உள்ளார்.

தமிழ்ச்செல்வி பொறுப்பேற்றது முதல் பல்வேறு பணிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கடந்த மார்ச் மாதம் வீரட்டிக்குப்பம் ஏரியில் குடிமராமத்து பணிக்காக அரசு அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று ஏரியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் தூண்டுதலின் பேரில் பெரிய காப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலர், ஊமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முறையாக அனுமதி பெறாமல் ஊராட்சி தலைவர் துணையோடு டிராக்டர் மூலம் மண் எடுத்து செல்வதாக தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் போலீசார் ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், வீரட்டிக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதில் சுவர் அமைக்கும் பணிநடைபெற்று வந்தது. தற்போது இந்த பணியை அதிமுக நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அரங்கநாதன் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கம்மாபுரம் ஒன்றியம் பெரிய காப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு ஊரின் முக்கிய அதிமுக பிரமுகர்கள் அழுத்தம் காரணமாக பல்வேறு ஊராட்சி பணிகளுக்கு என்னை புறக்கணிக்கின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவருக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அதிமுகவினர் அழுத்தம் காரணமாக எனக்கு பல்வேறு நெருக்கடிகள் வருகிறது. கையெழுத்து போடுவது மட்டும் உனது வேலை. மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று மிரட்டுகிறார்கள். இதில் கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கதறி அழுகிறார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணிகளை செய்ய ஆட்சியர் உத்தரவு
இது தொடர்பாக ஊராட்சி மன்ற  தலைவர் தமிழ்ச்செல்வி நேற்றுமுன்தினம் கடலூரில் ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்றார். ஆட்சியர் அங்கு இல்லாததால் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்தார். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரும்படி ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று காலை ஆட்சியரை தமிழ்ச்செல்வி சந்தித்தார். அப்போது இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தெரிவித்த ஆட்சியர், தொடர்ந்து பணிகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Tags : pantheon leader ,Superiors ,Female , Mission, superior disturbance, suicide, female panchayat leader, roar
× RELATED சட்டீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை