டெல்லி: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசின் அமைப்பு ரீதியிலான பொய்கள் அம்பலமாகும் போது நாடு மிகப்பெரிய விலைகொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். சர்வதேச இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையை இணைத்து அதனை அவர் மேற்கோள்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் உயிரிழப்புகள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், எல்லையில் சீனா ஊடுருவல் விவகாரங்களில் தொடர்ந்து, பாஜக அரசு பொய்யான தகவல்களை கூறி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதையடுத்து, சீனா ஊடுருவல் விவகாரத்தில் உண்மையை மறைக்க ஊடகங்கள் மிரட்டப்பட்டு இருப்பதாக ராகுல் புகார் கூறியுள்ளார். ஆனால் பொய்கள் அம்பலமாகும் போது நாடு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2014ம் ஆண்டில் மோடி பிரதமராக பதவியேற்றது முதல் தொடர்ந்து செய்து வரும் மிகப்பெரிய தவறுகளால் நாட்டின் அடிப்படையே பலவீனமடைந்துவிட்டதாக ராகுல் குற்றம்சாட்டியிருக்கிறார். எல்லை விவகாரத்தில் மத்திய அரசின் கோழைத்தனமான நடவடிக்கையால் தான் சீனாவுக்கு நமது மண்ணை ஆக்கிரமிக்கும் துணிச்சல் வந்ததாக ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.