டெல்லி: நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என மோசமான அறிகுறி இந்திய மருத்துவர் சங்கம் எச்சரித்திருக்கிறது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது பரிசோதையில் உறுதி செய்யப்படுவதாக இந்திய மருத்துவர் சங்கத்தின் ஒரு பிரிவான இந்திய மருத்துவமனை வாரியத்தின் தலைவர் டாக்டர் மோங்கா செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கொரோனா பரவல் மடங்குகளில் அதிகரிக்க காரணங்கள் பல உள்ளன என்று கூறியுள்ள அவர், ஆனால் கிராமப்புறங்களுக்கும் பரவியிருப்பது மிக மோசமான நிலையில் உள்ளதை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது சமூக பரவல் தொடங்கியிருப்பதையே காட்டுவதாக மோங்கா குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 10 லட்சத்து 38 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 629 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதும், 26 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதும் கொரோனா தாக்கத்தின் கொரோனா உச்சம் அடைந்திருப்பதற்கான ஆதாரம் என்று மோங்கா எச்சரித்துள்ளார்.
நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்து அதே நேரத்தில் புதிய நோய் பரவல் மண்டலங்களாக கிராமங்கள் உருவாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். எனவே மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பரவல் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும், அதற்காக மத்திய அரசின் உதவியை நாடலாம் என்றும் மோங்கா வலியுறுத்தியுள்ளார்.