×

கோழி மேய்ந்ததில் தகராறு கார் டிரைவர் அடித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த அரிக்கமேடு, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர், சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி துர்கா தேவி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சதீஷ்குமாரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அன்பழகன் (49). வெல்டர். இவரது மனைவி அழகு மீனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார், கோழி ஒன்றை வாங்கி வளர்த்து வந்தார். இவர், வீட்டிலிருந்து கோழி அடிக்கடி அன்பழகன் வீட்டுக்கு சென்று காம்பவுண்ட் ஓரமாக குழி பறித்து மேய்ந்தது. இதையடுத்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் சதீஷ்குமாரின் வீட்டுக்கு கோழி பறந்து அன்பழகன் வீட்டு காம்பவுண்டுக்குள் வந்து மீண்டும் மேய்ந்தது.

இதனால் அவர்களது மனைவிகள் அழகு மீனா, துர்காதேவி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் முற்றி வாய்த்தகராறு ஏற்பட்டது.  இவர்களுக்கு ஆதரவாக அவர்களது கணவன்கள் சசிகுமார், அன்பழகன் ஆகியோரும் ஓடி வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில், இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். மேலும், அவர்கள் இருவரும் தரையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர். இதில், சசிகுமாரின் பின் தலையில் கற்கள் குத்தி படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மயக்கம் போட்டு தரையில் பேச்சு, மூச்சு இன்றி கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, சசிகுமார் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிகுமார் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர்.


Tags : Car driver ,death ,Neighbor , Chicken, car driver, beaten to death, next door neighbor, arrested
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...