×

பறவைகள் சரணாலய பரப்பளவு குறித்து மத்திய அரசுக்கு கருத்துரு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா ஒரு பொது நல வழக்கை தொடர்ந்தார். அதில், வேடந்தாங்கல் சரணாயம் 29.51 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இந்த சரணாலயம் 1970க்கு முன்பிருந்தே அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களின் பாதுகாப்பில் உள்ளது.  ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோமீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும்.  எனவே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கு தடை விதித்தும், விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

 இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, மத்திய விலங்குகள் நல வாரியத்திற்கு சரணாலயத்தின் பரப்பை குறைப்பது குறித்து கருத்துரு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் விலங்குகள் நல வாரியத்தை அணுகி உரிய நிவாரணத்தை தேடிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : area ,Central Government ,Government of Tamil Nadu ,High Court ,bird sanctuary , Vedanthangal Bird Sanctuary, High Court, Government of Tamil Nadu
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...