×

தலைவர்களின் சிலைகளை இழிவுப்படுத்தும் விஷமிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவது, தலைவர்களின் சிலைகளை இழிவுப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான விஷமிகளை தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது, தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி  பழனிசாமி அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அரங்கேறிவரும் சம்பவங்கள் அருவருக்கத்தக்கவையாக அமைந்திருக்கின்றன. பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் விதமாக கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. எல்லா மதங்களும், சித்தாந்தங்களும் அடிப்படையில் அன்பையும், அனைவரையும் நேசிப்பதையுமே போதிக்கின்றன என்பதை மக்களின் அமைதியைக் கெடுக்க நினைக்கும் இந்த விஷமிகள் உணர வேண்டும்.

மறைந்த தலைவர்களை இழிவுபடுத்தியும், மத உணர்வுகளைத் தூண்டியும், அவற்றின் வழியாக அரசியல் லாபம் பார்க்க யார் நினைத்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டு மண்ணில் இடமில்லை. அத்தகைய கீழ்த்தரமான அரசியலை இங்கே யார் முன்னெடுத்தாலும் அவர்களை ஒடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதுபோன்ற நச்சு சிந்தனைகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்குரிய உறுதியான நடவடிக்கைகளை காவல்துறை தயவு, தாட்சண்யமின்றி மேற்கொள்ள வேண்டும்.

Tags : idols ,leaders ,DTV.Dhinakaran ,TTV.Dhinakaran , Leaders, Idols, TTV.Dhinakaran
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...