×

கடைகளுக்கு அனுப்பும் முன்பு மதுபானம் தீவிர பரிசோதனை: டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கப்படும் மதுவகைகள் தீவிர ஆய்வுக்கு பிறகே கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மொத்தம் 11 மதுபான உற்பத்தி ஆலைகளும், 7 பீர் உற்பத்தி ஆலைகளும், 1 ஒயின் உற்பத்தி ஆலையும் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடையில் வழங்கப்படும் மதுபானங்களுக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நெரிமுறைகள் மிக கவனமுடன் பின்பற்றப்படுகிறது.

மதுபானங்கள் தயாரித்த பின்னர் அதை பாட்டிலில் அடைக்கும் முன்னர் கலால் மேற்பார்வை அதிகாரிகள் அந்த மதுபானங்களின் மாதிரிகளை அதன் தயாரிப்பு தேதி, தொகுதி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு மீண்டும் சென்னை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பர்.  பின்னர், அவை மனித நுகர்விற்கு உகந்ததா என்று சென்னை தடயவியல் ஆய்வகம் அனுமதி சான்று வழங்கும். இதன் பின்னரே மதுபாட்டில்களில் அடைக்க கலால் மேற்பார்வை அலுவலரால் அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மதுபானம், பீர் மற்றும் ஒரு ஒயின் ஆலைகள், அனைத்து டாஸ்மாக் கிடங்குகள், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திலும் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.

அவ்வப்போது அதிகாரிகளால் மதுபானம், பீர் மற்றும் ஒரு ஒயின் ஆலைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுவகைகள் பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : stores ,Tasmac , Convenience stores, Liquor, Tasmac management
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...