×

சிறையிலிருந்து சில மாதங்களில் விடுதலையாக உள்ள நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் எதிர்காலம் சசிகலா கையிலா?

சசிகலா சிறையில் இருந்து விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறார் என்று உலாவிக் கொண்டிருக்கும் தகவல் அதிமுக நிர்வாகிகள் பலரின்
உறக்கத்தை கெடுத்திருக்கிறது.
* கொதிக்கும்  அமைச்சர்கள்
* மவுனம் காக்கும் சீனியர்கள்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக அவரது நெருங்கிய தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்வர் பதவியை அடைய சசிகலா காய் நகர்த்தினார். அதற்குள், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி அடைக்கப்பட்டனர். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

தற்போது, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக கட்சி செயல்பட்டு வருகிறது.  இந்த பரப்பான சூழ்நிலையில், சசிகலாவின் தண்டனை காலம் வருகிற 2021 பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் சசிகலா அதற்கு முன்பாகவே அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலை ஆக வாய்ப்புள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. ‘சசிகலா சிறையில் இருந்து விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறார்’ என்று உலாவிக் கொண்டிருக்கும் தகவல் அதிமுக நிர்வாகிகள் பலரின் உறக்கத்தை கெடுத்திருக்கிறது. அதேநேரம், சசிகலா வருகையை எதிர்பார்த்தும் அதிமுகவில் ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

சசிகலா விடுதலை குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அதிமுகவில் நேற்று எடுத்த முடிவுதான் இன்றும், நாளையும். அதில் இருந்து மாற மாட்டோம். சசிகலா குடும்பத்தை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம்” என்றார். அதிமுக அமைச்சர் காமராஜ் தஞ்சாவூரில் மூன்று நாட்களுக்கு முன் கூறும்போது, ‘இரண்டு அண்ணன்களும் கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா விரைவில் விடுதலை ஆகப்போகிறார் என்ற தகவல் வதந்தி. யாரும் நம்ப வேண்டாம். எங்களின் ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது’ என்றார்.

வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, ‘சசிகலா வெளியில் வருவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அவர் ரிலீஸ் என்று ஊடகங்கள்தான் சொல்கின்றன. சசிகலா வந்தாலும் என்றுமே அவரும் அவரது குடும்பத்தாரும் அதிமுகவின் எதிராளிகள்தான். அவர்களை எதிர்த்துதான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த கருத்தில் எங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவில் இருந்து எவருமே சசிகலா பின்னால் செல்ல மாட்டோம்’ என்றார். ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே சசிகலா விடுதலையானால் என்ன முடிவு எடுக்கப்படும் என்று வாய் திறக்கும் சூழலில், மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜூ மற்றும் அதிமுக முன்னணி தலைவர்களிடம் இருந்து எந்த கருத்தும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

சசிகலா அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விடுதலை ஆக வாய்ப்புள்ளது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அதிமுக கட்சிக்கு வாழ்வா, சாவா போராட்டமாக அமையும் என்று அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். காரணம், சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவும் பட்சத்தில் அதிமுகவின் எதிர்காலம் சசிகலாவின் கையில் சென்றுவிடும். இப்போதைக்கு சசிகலா குறித்து தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று தலைமையும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் சசிகலா தரப்பினரும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவு வரை அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் முடிவுக்கு பிறகு தங்களது அரசியல் விளையாட்டை தொடங்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், தற்போது அதிமுகவில் உள்ள பல முன்னணி தலைவர்கள், சசிகலா விடுதலைக்கு பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என்று அதிமுக தலைமைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.  இதையடுத்து, தேர்தலுக்கு முன்பே அதுபோன்ற மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை கண்டுபிடித்து கட்சி பதவியை பறிக்கவும்,  அவர்களுக்கு வரும் தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என்றும் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : release ,Sasikala ,assembly elections ,AIADMK ,elections , Prison, release, Assembly elections, AIADMK, Sasikala
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...