திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடகா மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டம் (ஐடிபிஎல்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக 312 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய்கள் பதிக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த குழாய் பதிக்க 20 மீட்டர் அகலத்திற்கும் 10 அடி ஆழத்திற்கும் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இந்த பெட்ரோலிய குழாயில் கசிவு ஏற்பட்டாலோ, அல்லது விபத்து ஏற்பட்டாலோ, நில உரிமையாளர் தான் பொறுப்பு. குழாய் செல்லும் வழித்தடத்தில் மரம் வளர்க்க முடியாது. கிணறு, ஆழ்துளை கிணறு, கட்டிடங்கள் மற்றும் வீடுகள் கட்ட முடியாது. நிலத்தை அடமானம் வைத்து கடன் பெறவும் முடியாது. இதனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்படும் விவசாயிகளின் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி, புலவன்காடு மற்றும் கருவேப்பம்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகள் இணைந்து கருப்பு கொடி ஏந்தி நேற்று போராட்டம் நடத்தினர்.
இது குறித்து ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் பெருமாள் கூறுகையில், ‘இந்த திட்டத்தால் விவசாயிகளின் நிலம் பெருமளவு பாதிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 30 கிலோ மீட்டர் தூரம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி, விவசாயிகளுக்கு தெரியாமல் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்கக் கூடாது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலையோரம் கொண்டு செல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். பள்ளிபாளையம்: பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரங்களில் செயல்படுத்த வலியுறுத்தி, நேற்று பள்ளிபாளையத்தில் விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் கருப்பு கொடி ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.