×

ஜனநாயகத்தை காக்க ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார். பைலட்டுக்கு ஆதரவாக, 18 எம்.எல்.ஏ.,க்கள், ஹரியானா மாநிலம், மானேசரில் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து, துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி ஆகியவற்றிலிருந்து, சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரை ஆதரித்த இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.

இதனால் ராஜஸ்தான் அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவி பரபரப்புக்கு மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பகுஜன் சமாஜ் கட்சிச் எம்.எல்.ஏக்களை காங்கிரஸில் சேர்த்ததன் மூலம் இரண்டாவது முறையாக எங்களை ஏமாற்றியுள்ளார். சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு காரியத்தைச் அசோக் கெலாட் செய்தார் என்பதும் தெளிவாகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மையை கணக்கில் கொண்டு, மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலமாக ஜனநாயகத்தை காக்க முடியும்  என்று கூறியுள்ளார்.


Tags : Mayawati ,Rajasthan , Democracy, Rajasthan, Presidential Rule, Mayawati
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு