×

இந்தியா, சீனா எல்லை பிரச்னை பேச்சுவார்த்தையில் தீர்வுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: ``இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னையில் பேச்சுவார்த்தையின் மூலம் எந்தளவுக்கு தீர்வு காணப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. அதே நேரம், நாட்டின் ஒரு அங்குலத்தை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என உறுதியாக கூற முடியும்’’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையில், இரு தரப்பிலும் படைகளை விலக்கி கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இரண்டு நாள் பயணமாக நேற்று லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவானே ஆகியோரும் சென்றனர்.

லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ஸ்டக்னாவில் ராணுவத்தினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பின், பாதுகாப்பு படையினர் நடத்திய சாகச நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஒத்திகைகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.  பின்பு, லுகுங் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது;
இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்னை பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தளவுக்கு தீர்வு ஏற்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. அதே நேரம், நாட்டின் ஒரு அங்குலத்தை கூட உலகின் எந்த சக்தியாலும் எடுத்து செல்ல முடியாது என உறுதியாக கூற முடியும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு ஏற்பட்டால், அதை விட சிறந்தது ஒன்றுமில்லை.

உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் சிலர் உயிரிழந்ததை நினைத்து வருந்துகிறேன். அவர்களது உயிர் தியாகம் வீணாகாது.  இவ்வாறு அவர் பேசினார். கடந்த 3ம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, டாக் சென்று வந்த நிலையில், ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அங்கு ஆய்வு மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அண்டை நாடுகளுடன் மோதலால் சிக்கல்
ராகுல் தனது நேற்றைய டிவிட்டர் பதிவில், ``கடந்த 2014 முதல், பிரதமர் மோடியின் தொடர்ச்சியான தவறுகளும், கண்மூடித்தனமும் இந்தியாவை பலவீனப்படுத்தி மிகவும் பாதித்துள்ளது. அரசியலில் வெறும் வார்த்தைகள் மட்டும் போதுமானது அல்ல. தற்போது, பொருளாதாரம், வெளியுறவு கொள்கை, அண்டை நாடுகளுடன் மோதல் என நாடு சிக்கலில் மாட்டியுள்ளது. இதுவே சரியான நேரம் என்று சிக்கலான நேரத்தில் சீனா தாக்குதல் நடத்தி உள்ளது. ஒரு நாடு என்பது அதன் வெளிநாடுகளுடனான நட்புறவு, அண்டை நாடுகள், பொருளாதாரம் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுவதாக மக்கள் உணர வேண்டும். கடந்த காலத்திலும் லடாக் எல்லையில் மோதல்கள் மற்றும் பிரச்னைகளை கையாள்வதில் அரசு தோல்வி அடைந்துள்ளது,’’ என்று கூறியுள்ளார்.


Tags : Rajnath Singh ,India ,China ,talks , India, China, Defense Minister Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...