சென்னை: திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு திரைத்துறையில் மிக உயர்ந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கமலஹாசன், மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்ட 50 சினிமா பிரபலங்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் புதிய அலையை தொடங்கி வைத்தவர் பாரதிராஜா என்று அறிமுகம் செய்த அவருடைய சாதனைகளையும் கடிதத்தில் பட்டியலிட்டுள்ளனர். 6 முறை தேசிய விருதை வென்றுள்ள பாரதிராஜா, பத்மஸ்ரீ விருதை பெற்றதையும் பிரபலங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
எனவே 78 வயது பிறந்தநாளை கொண்டாடும் பாரதிராஜாவுக்கு மிக உயர்ந்த தாதாசாகேப் பால்கே விருதை வழங்குவது பொருத்தமான கவுரவமாக இருக்கும் என்றும் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூன்று பக்க கடிதத்தில் நடிகர்கள் தனுஷ், பார்த்திபன், சுகாஷினி, இயக்குனர்கள் சேதுமாதவன், பிரியதர்ஷன், சேரன், பாண்டியராஜன், வெற்றிமாறன் மற்றும் கலைப்புலி தாணு, சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் கையெழுப்பமிட்டுள்ளனர். தொடர்ந்து, கடிதத்தில் கையெழுப்பமிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா பெயரை பால்கே விருதுக்கு பரிந்துரைப்பதாக கவிதை வடிவில் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.