புதுச்சேரி: புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் ஒரு டன் எடையுள்ள அரிய வகை திமிங்கல சுறா நேற்று மாலை இறந்து கரை ஒதுங்கியது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் திமிங்கல சுறா ஒன்று நேற்று மாலை கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் சுறாவை பார்வையிட்டனர். அது, 12 அடி நீளமும், 1 டன் எடையும் கொண்ட ‘வேல் ஷார்க்’ என்ற திமிங்கல சுறா என தெரியவந்தது. மன்னார் வளைகுடா ஆழ்கடலில் இத்தகைய திமிங்கல சுறாக்கள் இருக்கின்றன. கடல் நீரோட்டத்தின் மாற்றத்தால் புதுச்சேரி கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து, திமிங்கல சுறாவை வியப்புடன் பார்த்து சென்றனர். இதுபற்றி வனத்துறையினரிடம் கேட்டதற்கு, இறந்து கரை ஒதுங்கியுள்ள திமிங்கல சுறா, நாளை (இன்று) ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகே அதன் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றனர்.