பழநி: பழநியில் இன்று முதல் கடைகள் அடைக்கப்படுவதால் மளிகை கிடைக்காது என்ற நிலையில் மதுபான கடைகள் திறக்க அனுமதித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. பழநி நகரில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. சமூக விலகல் குறைந்ததே இதற்கு காரணம் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பழநி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், போலீசார் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நகர் முழுவதும் இன்று (வெள்ளி) முதல் 7 நாட்களுக்கு 23ம் தேதி வரை அனைத்து வகை கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டது. அத்தியாவசியமான பால் மற்றும் மருந்துக்கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. உழவர் சந்தை திறந்திருந்தால் அங்கும் சமூக விலகல் பிரச்னை ஏற்படும் என்பதால் 19ம் தேதி வரை உழவர் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது.
பழநி மட்டுமின்றி அருகில் உள்ள பாலசமுத்திரம், ஆயக்குடி மற்றும் நெய்க்காரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும் கடைகளை அடைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்படும் நிலையில் டாஸ்மாக் கடை மட்டும் திறந்திருக்க அனுமதித்திருப்பது கடை அடைப்பை கேலி செய்யும் விதமாக மாறி உள்ளது. சமூக விலகல் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அரசின் லாப நோக்கை கைவிட்டு, பழநி பகுதியில் டாஸ்மாக் கடைகளை கடை அடைப்பு முடிவடையும் வரை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடை அடைப்பின் காரணமாக பழநியில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளில் கடும் கூட்டம் நிலவியது. உழவர் சந்தையிலும் கடும் கூட்டமிருந்தது.
3 பேரூராட்சிகளிலும் கடைகள் அடைப்பு
பழநி நகரைத் தொடர்ந்து அருகில் பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி பேரூராட்சிகளிலும், ஆ.கலையம்புத்தூர் ஊராட்சியிலும் கடைகள் தொடர்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று இரவு 9 மணி முதல் 25ம் தேதி இரவு 9ம் வரை பாலசமுத்திரம் மற்றும் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்படும். ஆயக்குடி பேரூராட்சியில் இன்று மற்றும் நாளை 2 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகளும், இரவு 8 மணி வரை ஹோட்டல்களும் செயல்படுவதென்றும், 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை 5 நாட்கள் முழுமையாக கடைகள் அடைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.