தஞ்சாவூர்: கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு, புதிய மாவட்டமாக அமைக்கக்கோரி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையாகும். இதற்காக பொதுமக்கள் இதுவரை பல போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்நிலையில், இன்று கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட வட்டங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு ஊரடங்கு காலத்தில் பின்பற்றியது போல காட்சியளிக்கின்றன.
அதாவது சுமார் 14 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த போராட்டத்தின் நோக்கமாகும். மேலும், திருப்பனந்தாள், நாச்சியார் கோவில் உள்ளிட்டவற்றை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.